செய்திகள்
கோப்பு படம்

அரக்கோணம் அருகே ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு - வாலிபர் கைது

Published On 2019-10-12 10:30 GMT   |   Update On 2019-10-12 10:30 GMT
அரக்கோணம் அருகே ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:

சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 25). இவருடைய மனைவி ரேவதி(20). இவரது தாய் வீடு அரக்கோணம் அருகே உள்ள அம்மனூரில் உள்ளது. நேற்று காலை சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயிலில் ரேவதி பயணம் செய்தார்.

ரெயில் செஞ்சிபனப்பாக்கம் ரெயில் நிலையத்தில் நின்று விட்டு புறப்படும் போது திடீரென ரெயிலில் இருந்த வாலிபர் ஒருவர் ரேவதியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்ட ரேவதி நகையை இறுக்கமாக பிடித்து கொண்டார்.

இதனால் நகை அறுந்தது. இதில் வாலிபர் கையில் 1½ பவுன் நகையும், ரேவதியிடம் 4 பவுன் நகையும் இருந்தது. இதனையடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ரேவதி அரக்கோணம் ரெயில்வே போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினார். உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பாடசாலை கிராமத்தை சேர்ந்த சசி என்பவரின் மகன் யாசின் (20) என்பதும், ரேவதியிடம் நகையை பறித்து சென்றவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து ரெயில்வே போலீசார் அவரை கைது செய்து 1½ பவுன் நகையை மீட்டனர்.
Tags:    

Similar News