செய்திகள்
குஷ்பு - சிவாஜி

குஷ்பு என்னும் நான்: சந்தித்ததும் சிந்தித்ததும் - நடிகர் திலகத்தின் பாராட்டு

Published On 2021-11-15 13:48 GMT   |   Update On 2021-11-15 13:48 GMT
நடிகை குஷ்பு கடந்த வந்த பாதையும் பயணமும் கடினமானது அதை ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
பிரபுவுடனான எனது திரை உலக பயணம் இனிமையான பயணம். சந்தோசமும், மகிழ்ச்சியும் நிறைந்தது. தமிழில் அறிமுகமாகி ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ் என்று பல பிரபலங்களுடன் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறேன். பெரும்பாலும் எல்லா படங்களும் பேர் சொல்லும் படங்களாகத் தான் அமைந்தன. ஆனாலும் நானும் பிரபுசாரும் ஜோடியாக நடித்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.

நானும் கொஞ்சம் குண்டாக இருப்பேன். பிரபு சாரும் அப்படித்தான் இருப்பார். இருவரது கன்னங்களும் புசு புசுவென்று இருக்கும். அதனால் ஜோடி பொருத்தம்  கச்சிதமாக  இருந்தது. ரசிகர்களை கவர்ந்தது. எப்படி சிவாஜி சார்-பத்மினி அம்மா, ஜெமினி சார்- சாவித்திரி அம்மா, கமல்- ஸ்ரீதேவி என்று ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி அமைந்ததோ அதே வரிசையில் எங்களையும் ரசிகர்களுக்கு  பிடித்து போய் இருக்கிறது.

சின்னத்தம்பி மட்டு மல்லாமல், கிழக்குகரை, பாண்டித்துரை, நாளைய செய்தி, மறவன், உத்தமராசா, தர்மசீலன் என்று பல படங்களில் பிரபுக்கு ஜோடியாக  நடித்து இருக்கிறேன். சின்னதம்பி படப்பிடிப்பில்  கோபிசெட்டிபாளையத்தில் வாசுசார், பிரபு, நான் எல்லோரும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருந்தோம். வெளியில் எங்கு செல்ல வேண்டும் என்றாலும்  மூன்று பேரும் சேர்ந்தே போவோம்.

அந்த படம் மட்டுமல்ல வாசு சார் டைரக்ஷனில் நான் நடித்த எல்லா படங்களிலும் படப்பிடிப்பு நடந்த எல்லா இடங்களிலும் இதே கதை தான். வாசுசார் டைரக்ஷனில் நான் நடித்த படங்கள் வெற்றி பெற்றதற்கு இன்னும் பல காரணங்கள் உண்டு. அவர் டைரக்டராக, நான் நடிகையாக இருந்தாலும் அவர் என்னை நன்றாக  வேலை வாங்கினார். நான் அவரை காப்பியடித்ததால் தான் அவ்வளவு அழகாக காட்சிகள் அமைந்தது என்பதுதான் உண்மை. காப்பியடிக்க கூடாது என்பார்கள். ஆனாலும் அவரிடம் நான் காப்பியடித்ததை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.

காட்சி அமைப்பு எப்படி இருக்க வேண்டும்? அந்த காட்சியில் நடிகர்-நடிகை எப்படி நடிக்க  வேண்டும்? என்று வாசுசார் மனதில் ஒரு வடிவம் கொடுத்து வைத்திருப்பார். அதைத்தான் நடிக்கும் போது எதிர்பார்ப்பார். ஆனால் நான் எதையும் முன் கூட்டியே பிளான் பண்ண மாட்டேன். டைரக்டரின் எண்ணத்தை புரிந்து கொள்வேன். அவர் காட்சிகளை அவ்வளவு தத்ரூபமாக நடித்து காட்டி விளக்குவார். அதை காப்பியடிக்க பயிற்சி தேவையில்லையே? அப்படியே காப்பியடித்து விடுவேன்.

தொடர்ந்து இரவு, பகலாக படப்பிடிப்புகள் நடக்கும். கொஞ்சம் கூட சோர்வு தெரியாமல் நடிக்க வேண்டும். உடல் எப்படி கேட்கும்? களைப்பு, மன அழுத்தம், உடல் சோர்வு எல்லாமுமாக சேர்ந்து கொண்டது. எனக்கு வலிப்பு வரும். அது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அன்று அப்படித்தான் படப்பிடிப்பு தளத்தில் வலிப்பு வந்தது. மயங்கி சாய்ந்துவிட்டேன். படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.

ஓடி வந்து பார்த்த வாசு சார் நான் கிடந்த கோலத்தை பார்த்து துடித்து போனார். தனது குழந்தையை போல் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தார். நான் கண்விழிக்கும் வரையில் அவர் கண்ணில் அப்படி ஒரு சோகம். தனது மகளுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் எந்த நிலையில் இருந்திருப்பாரோ அதேபோல் அழுது இருக்கிறார்.

அழுது அழுது அவரது கண்கள் வீங்கி போனது. ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஓட்டல் அறைக்கு அழைத்து சென்று தூங்க வைத்துவிட்டுத் தான் அவர் அறைக்கு சென்றார். வலிப்புக்காக சாப்பிடும் மாத்திரை வீரியம் மிக்கது. கடுமையான தூக்கம் வரும். கண்விழித்த பிறகும் உடல் சோர்வால் எழுந்து நடமாடகூட முடியாது.

மறுநாள் ஷூட்டிங் இருந்தது. என் அறைக்கு வந்தவர் என்னை தொந்தரவு செய்து விடக்கூடாது என்பதற்காக ஆண்டியை அழைத்து ‘எப்படி இருக்கிறாள்? நன்றாக தூங்கினாளா? மெதுவாக எழுந்து வரட்டும’ என்று சொல்லி இருக்கிறார். அதற்குள் நான் ஷூட்டிங் செல்வதற்கு தயாராகி விட்டேன். அதை பார்த்ததும், ‘ரொம்ப ரிஸ்க் எடுக்காதே’ என்று ஆலோசனை கூறி  சென்றார்.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன். எண் கண்களில் தூக்கம் சொக்கியது. அதை பார்த்ததும மதியம் வரை சும்மா இருக்க வைத்து விட்டு அதன்பிறகு ஷாட் எடுத்தார்கள். ஆனாலும் ஒவ்வொரு ஷாட்டிலும் ‘எப்படிம்மா இருக்கே? கஷ்டமா இருக்கா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார். அந்த பரிவு, என் மீது வைத்திருந்த பாசம் தான் அவருடன் டைரக்டர் என்ற எல்லையையும் தாண்டி தந்தையிடம் குழந்தை சண்டை போடுவது, அடம் பிடிப்பது போல் என்னை அடம் பிடிக்கவும் வைத்தது.

சின்னதம்பி படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினோம். படம் வெளியானது. பல ஊர்களில் நூறு, இரு நூறு நாட்கள் ஓடி மிகப் பெரிய சாதனை படைத்தது. அந்த நாட்களில் பிரபுவுடன் ஏற் பட்ட நெருக்கம் காரண மாக நாங்கள் எல் லோரும் அன்னை இல்லத்துக்கு அடிக்கடி செல்வோம். அவர் எல்லோருக்கும் விருந்து கொடுப்பார். எப்போது சென்றாலும் அன்னை இல்லத்து  வரவேற்பு மிகப்பிரமாதமாக இருக்கும். குடும்பத்தினர் ஒவ்வொரு வரும் அப்படி கவனிப்பார்கள்.

அவர் வீட்டு விருந்து என்றால் சொல்ல வேண்டியதில்லை. அன்னை இல்லத்து விருந்து சாப்பிட்ட ஒவ் வொருவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். இன்று நான் 21 வயது, 19 வயது மகள் களுக்கு தாயாகி விட்டேன். பிரபுசாரும் பேரன், பேத்தி பார்த்து விட்டார்.
எல்லோரது வாழ்க்கை யிலும் ஏதா வது அழகிய தருணம் இருக்கும். அதேபோல்தான் எனது வாழ்க்கையிலும் பிரபு சாருடன் பழகிய தரு ணங்கள் அழகிய தருணங்கள் என்பேன்.

நாங்கள் இருவரும் குடும்பம், குழந்தைகள் என்றாகிவிட்ட பிறகும் என் கணவர் படத்தில் அவர் நடித்து இருக்கிறார். குடும்ப உறவினர்கள் போல் எங்கள் நட்பு இரு குடும்பங்களுக்கு இடையேயும் இப்போதும் தொடர்கிறது. ஒரு நாள் சென் னையில் நடந்த படப்பிடிப்பு தளத்தில் அப்படி ஒரு சண்டை வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  டைரக்டருடன் நான் சண்டை போட்டதால் கோபத்தில் அவர்  எழுந்து வீட்டுக்கே சென்றுவிட்டார். படப்பிடிப்பு நடக்குமா? என்று கதாநாயகனே கலங்கிப்போனார். அதன்பிறகு என்னதான் நடந்தது?


Tags:    

Similar News