செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்- மு.க.ஸ்டாலின் உத்தரவு

Published On 2021-10-19 19:50 GMT   |   Update On 2021-10-19 19:50 GMT
தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை:

மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ள சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக சிலரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப்பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

அதன்படி. வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்திற்கு நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு கூட்டுறவு, புள்ளியியல் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் நலத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெல்லை மாவட்டத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், திருவாரூர் மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கோவை மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News