செய்திகள்
சூளகிரி அருகே அரசு டவுன் பஸ்கள் இயக்கம் நிறுத்தம் - மாணவ, மாணவிகள் கடும் அவதி
சூளகிரி அருகே வேம்பள்ளிக்கு இயக்கப்பட்ட 2 அரசு டவுன்கள் நிறுத்தப்பட்டதால் மாணவ-மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகேயுள்ள வேம்பள்ளிக்கு (சின்னார் அணை) 2 அரசு டவுன் பஸ்கள், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில் இருந்து சூளகிரி வழியாக இயக்கப்பட்டன. இந்த பஸ்கள், சூளகிரியில் இருந்து காமநாயக்கன்பேட்டை, போகிபுரம், இண்டிகானூர் வழியாக வேம்பள்ளிக்கு செல்கின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக 2 பஸ்களும், வேம்பள்ளி பகுதிக்கு இயக்கப்படவில்லை. இதனால், இந்த பகுதி மக்களும், வேம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருந்து சூளகிரியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ, மாணவிகளும் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
இதுகுறித்து, கிராம மக்கள், டிரைவர், நடத்துனரிடம் கேட்டபோது, சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே பஸ்களை இயக்க முடியவில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. மாணவ-மாணவிகள் நலன் கருதி நிறுத்தப்பட்ட 2 டவுன் பஸ்களையும் மீண்டும் இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.