செய்திகள்
கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை
கல்லிடைக்குறிச்சி அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள கீழஏர்மாள்புரம் தொண்டாமரத்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் துரைமுத்து முருகன்(வயது 21) கேரளாவில் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
கொரோனாவால் தற்போது சில மாதங்களாக வேலையில்லாததால் சொந்த ஊருக்கு வந்தார். கடந்த நவம்பர் மாதம் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சட்டநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் துரைமுத்து முருகன் மிகுந்த மனவேதனையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்குப்போட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்கு வந்த அவரது பெற்றோர் அவரது அறையின் கதவு திறக்கப்படாததை பார்த்து அதிர்ச்சியடைந்து ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
உடனே கதவை உடைத்து அவரை மீட்டு அம்பை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தூக்குப்போடுவதற்கு முன்பு செல்போனில் யாரிடமும் பேசினாரா என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அதில் அவர் வாட்ஸ் அப்பில் மிஸ் யூ நண்பா என வாசகம் எழுதி ஸ்டேட்டஸ் வைத்துள்ளது தெரியவந்தது. இதனால் அவரது நண்பன் இறந்த துக்கத்தில் இருந்து துரைமுத்து முருகன் அதனால் மனவிரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரித்து வருகிறார்கள்.