செய்திகள்
அரூர் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு
அரூர் அருகே ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
அரூர் அருகே கோட்டப்பட்டியை சேர்ந்தவர் தமிழரசு (வயது 61). ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர். இவருடைய மனைவி முருகம்மாள். இவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டை பூட்டி விட்டு சென்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இந்தநிலையில் சிகிச்சை முடிந்து நேற்று முன்தினம் மாலை ஊருக்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 16½ பவுன் நகை மற்றும் ரூ.1.20 லட்சம் மற்றும் பூஜை அறையில் இருந்த 1¾ கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர்கள் கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி விசாரணை நடத்தினார். மேலும் தர்மபுரியில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.