உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே ஏரியில் தொழிலாளி பிணம்
திருத்தணி அருகே ஏரியில் தொழிலாளி பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள தெக்களூர் ஏரியில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தது தெக்களூர் காலனியை சேர்ந்த தொழிலாளி ராஜேந்திரன்(45) என்பது தெரியவந்தது.
அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக 2 குழந்தைகளுடன் பிரிந்து திருவள்ளூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதத்தில் மர்மநபர்கள் யாரேனும் அவரை அடித்து கொலை செய்து ஏரியில் வீசினார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.