செய்திகள்
முருகனை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்த காட்சி.

விடுதலை செய்யக்கோரி நளினி- முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்

Published On 2019-12-02 15:05 GMT   |   Update On 2019-12-02 15:05 GMT
விடுதலை செய்யக்கோரி வேலூர் ஜெயிலில் நளினியும், முருகனும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல ஆண்டுகளாக ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் தங்களை விடுதலை செய்ய வேண்டும் அல்லது கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று நளினி பிரதமருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்.

அதில் தன்னையும் தனது கணவரையும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்ற சிறை அதிகாரிகள் மறுக்கிறார்கள். சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டும் கூட ஜெயில் அதிகாரிகள் அதை கடைப்பிடிக்கவில்லை. தங்களை கர்நாடக ஜெயிலுக்கோ அல்லது வேறு மாநிலத்துக்கோ மாற்ற வேண்டும் என்று நளினி தெரிவித்துள்ளார்.

அதேபோன்று தங்களை கருணைக் கொலை செய்யுமாறு சிறைத்துறை நிர்வாகம் மூலம் சுப்ரீம் கோர்ட்டிலும் நளினி மனுதாக்கல் செய்துள்ளார். அதே கோரிக்கையை வலியுறுத்தி நளினி கடந்த 28-ந்தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். தொடர்ந்து இன்று 5-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.

கருணைக் கொலை செய்யக்கோரி முருகனும் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். அதிகாரிகள் கேட்டுக் கொண்டும் அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து விட்டனர். நளினியின் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
Tags:    

Similar News