செய்திகள்
வேனில் கடத்தப்பட்ட மதுபாட்டில்களையும், கைதான இருவரையும் படத்தில் காணலாம்.

அவினாசி அருகே வேனில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

Published On 2021-05-08 22:19 GMT   |   Update On 2021-05-08 22:19 GMT
அவினாசி அருகே வேனில் கடத்தப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவினாசி:

மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின்படி அவினாசி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சர்வேஸ்வரன், கருப்புசாமி, ஜெகதீஸ் மற்றும் போலீசார் அவினாசி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து அவினாசியை அடுத்த வெள்ளியம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது அந்தவேனில் 27 அட்டைபெட்டிகளில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அந்த வேனை ஓட்டி வந்தவர் கோவை காளப்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை மகன் பால்ராஜ் (வயது 30) என்பதும், அவருடன் வந்தவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த மகாலிங்கம் மகன் அறிவழகன் (28) என்பதும் தெரியவந்தது.

நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இ்ருவரும் அவினாசி அருகே வெள்ளியம்பலத்தில் உள்ள அரசு மதுக்கடையில் இருந்து 180 மில்லி அளவுள்ள 1,296 மதுபாட்டில்களை வேனில் ஏற்றிக்கொண்டு காளப்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜ் மற்றும் அறிவழகன் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்கள் மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் தலைமறைவான ஓட்டல் உரிமையாளரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News