செய்திகள்
கைது

ஓட்டலில் தவறவிட்ட செல்போனை திருடியவர் கைது

Published On 2021-11-26 12:05 GMT   |   Update On 2021-11-26 12:05 GMT
ஓட்டலில் தவறவிட்ட செல்போனை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்கால் பெரமசாமிபிள்ளை தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 41). வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக்கில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று நாகை மாவட்டம் பொறையாருக்கு மோட்டார் சைக்கிளில் செல்லும் வழியில் கோட்டுச்சேரி பூவம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டார்.

அப்போது அவர் தனது செல்போனை ஓட்டலில் மறந்து வைத்துவிட்டு பொறையார் புறப்பட்டு சென்றார். சிறிது தூரம் சென்ற நிலையில், செல்போன் இல்லாததை அறிந்து, அவர் மீண்டும் ஓட்டலுக்கு வந்து பார்த்தபோது அங்கு செல்போன் இல்லை.

இது குறித்த சிவகுருநாதன் அளித்த புகாரின்பேரில் கோட்டுச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசாரின் இரவு ரோந்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் (42) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர், பூவம் ஓட்டலில் சிவகுருநாதன் தவறவிட்ட செல்போனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து சுரேசை போலீசார் கைது செய்து, செல்போனை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News