செய்திகள்
கொரோனா கவச உடையை அணிந்து வலம் வந்த முதியவர்

குப்பையில் வீசிச்சென்ற கொரோனா கவச உடையை அணிந்து வலம் வந்த முதியவர்

Published On 2021-04-09 07:43 GMT   |   Update On 2021-04-09 07:43 GMT
பஸ்நிலையத்தில் குப்பையில் வீசிச்சென்ற கொரோனா கவசஉடையை முதியவர் அணிந்து சுற்றியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குள்ளனம்பட்டி:

சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது மாலை 6 மணிமுதல் 7 மணிவரை கொரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அவர்கள் கொரோனா கவச உடை அணிந்து வாக்களித்து செல்லலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருந்தது. அவர்கள் சென்றபிறகு வாக்குபதிவு மையம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.

அதன்பிறகு வாக்காளர்கள் விட்டுச்சென்ற கையுறை மற்றும் கழிவு பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள குப்பை தொட்டியில் கையுறை மற்றும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்தும் கவசஉடை கிடந்தது.

பஸ்நிலையத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு முதியவர் அந்த உடையை அணிந்து அங்குள்ள கடைகளிலும், பயணிகளிடமும் பணம் கேட்டு வந்தார். இதை பார்த்ததும் இவர் உண்மையிலேயே கொரோனா தொற்று உள்ளவரா என்ற அச்சம் ஏற்பட்டது.

நீண்டநேரம் பஸ்நிலையத்திலேயே அதே உடையில் திரிந்ததால் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் அணிந்த உடையை அப்புறப்படுத்தி அவருக்கு வேறு உடை வழங்கப்பட்டது. வாக்குச்சாவடி மையத்தில் கிடந்த கையுறை மற்றும் கொரோனா நோயாளிகள் பயன்படுத்திய கவச உடை போன்றவற்றை முறையாக அப்புறப்படுத்தாதால் இதுபோன்ற நிலை ஏற்பட்டது என்றும், எனவே சுகாதாரத்துறையினர் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News