உள்ளூர் செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா- தினசரி பாதிப்பு 26 ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-01-19 15:19 GMT   |   Update On 2022-01-19 15:19 GMT
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று மாலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,50,635 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 26,981 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக சற்று குறைந்த நிலையில், மீண்டும் அதிகரித்துள்ளது நேற்றைய பாதிப்பு 23888 ஆக இருந்த நிலையில் இன்று 26 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.  பாதிப்பு விகிதம் 18 சதவீதமாக உள்ளது.

சென்னையில் ஒரே நாளில் 8007 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. செங்கல்பட்டில் 2194 பேருக்கும், கோவையில் 3082 பேருக்கும், திருவள்ளூரில் 914 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 718 பேருக்கும், கன்னியாகுமரியில் 1008 பேருக்கும், மதுரையில் 732 பேருக்கும், திருப்பூரில் 756 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 17,456 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 6 ஆயிரத்து 501 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37,073 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,70,661 ஆக உயர்ந்துள்ளது.  
Tags:    

Similar News