செய்திகள்
மங்கலம்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு
மங்கலம்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
பெண்ணாடம்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்அந்துவான். இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன், மங்கலம்பேட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று இவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜான்அந்துவான், உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மங்கலம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.