செய்திகள்

சுகாதார சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published On 2019-01-27 07:34 GMT   |   Update On 2019-01-27 07:34 GMT
சுகாதார சேவை வழங்குவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #MaduraiAIIMS
மதுரை:

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மக்களுக்கு சுகாதார சேவைகளை வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது. பிரசவத்தின்போது தாய்-சேய் இறப்பு சதவீதம் பெருமளவு குறைந்துள்ளது. தேசிய அளவில் குழந்தை இறப்பு விகிதம் 34 என்ற நிலை உள்ளது.

ஐக்கிய நாட்டு சபை சுகாதாரம் குறித்த நிலையான வளர்ச்சியில் 2030-ம் ஆண்டு தாய்மார்கள் பேறுகால இறப்பு சதவிகிதத்தை 67 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகம் 2016-ம் ஆண்டிலேயே இந்த இலக்கினை அடைந்து மத்திய அரசின் விருதினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மாவின் தொலைநோக்கு திட்டம் மூலம் மக்களுக்கு தரமான சுகாதார திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை பல்வேறு மருத்துவ திட்டங்களில் தனிக்கவனம் செலுத்தியதால் பல சாதனைகளை படைத்துள்ளது. 2018-ம் ஆண்டு முதல் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இறந்தவர்களின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் எப்போதுமே மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது.

தேசிய அளவில் மிக சிறந்து செயல்படும் என்ற மாநிலம் என்ற விருதினை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசு தொடர்ந்து பெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வரவேற்று பேசினார். விழா மேடையில் பிரதமர் மோடிக்கு மீனாட்சி அம்மன் சிலையை நினைவு பரிசாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
Tags:    

Similar News