உள்ளூர் செய்திகள்
கால்நடை பராமரிப்புத் துறையில் உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 23- ந்தேதி வரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தர்மபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 23- ந்தேதி வரை தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது. மேற்கண்ட பணிக்கு விண்ணப்பித்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் அழைப்பாணை கடிதம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
அலுவலர் அல்லது தலைமை ஆசிரியரின் நன்னடத்தை சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் இருப்பின் அதற்கான சான்று ஆதார் அட்டை, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். நேர்காணல்அழைப்பாணை கிடைக்கப்பெறாதவர்கள் நாளை முதல் 23- ந்தேதி வரை வேலை நேரங்களில் தர்மபுரி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் நேரில் அழைப்பாணையை பெற்றுக்கொள்ளலாம். நேர்காணல் அழைப்பாணை இல்லாதவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.