செய்திகள்
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய தயங்குவது ஏன்? - அரசுக்கு ஸ்டாலின் கேள்வி
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து வருவதால், அதற்கு அரசு தடை விதிக்கக்கோரி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை:
ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பலர் தற்கொலை செய்து வருவதால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன.
அந்தவகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை விதிக்கக்கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் எனக் கடந்த ஜூலை மாதமே அ.தி.மு.க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் ஆன்லைன்' சூதாட்டம், 11 பேர் உயிரைப் பறித்துள்ள நிலையில், முடிவு எடுக்க அ.தி.மு.க. அரசு மேலும் அவகாசம் கேட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
மூன்று மாதமாகியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்' என்று நீதிபதிகள் நேற்றைய தினம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தை தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை செய்துள்ளன.
தமிழகத்தில் மட்டும் இதைத் தடை செய்யத் தயங்குவது ஏன்? என்ன உள்நோக்கம். ஆன்லைன் சூதாட்டத்தை உடனடியாகத் தடைசெய்து, சமூகத்தைச் சூழ்ந்துள்ள தீமையை நீக்கிட வேண்டும்; தாய்மார்களின் கண்ணீரைத் துடைத்திட முயற்சி செய்ய வேண்டும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.