செய்திகள்
கைது

மதுரை அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது

Published On 2021-09-11 08:37 GMT   |   Update On 2021-09-11 08:37 GMT
மதுரை அருகே தொழிலாளி கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). இவர் எச்.எம்.எஸ். காலனி புதுவாழ்வு நகரில் புதிதாக கட்டப்படும் வீட்டின் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

அங்கு கொட்டப்படும் ஜல்லி, மணல் பக்கத்து வீடு வரை பரவி கிடந்தது. இதனால் அடுத்த வீட்டில் வசிக்கும் ஆசாரி கணேசன் குடும்பத்தினர் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்பட்டனர்.

இதுதொடர்பாக கணேசன் அடிக்கடி காவலாளி கணேசனிடம் புகார் கூறி வந்தார். நேற்றும் அவர் கூறுகையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காவலாளி கணேசனுக்கு ஆதரவாக அவரது மகன் கவுதம், நண்பரான லோடுமேன் விக்னேஷ் (24) மற்றும் சிலர் வந்தனர்.

இதேபோல் ஆசாரி கணேசனுக்கு ஆதரவாக அவரது மகன் அருண் பிரகாஷ் (34) வந்தார்.

மோதலின்போது ஆத்திரம் அடைந்த அருண் பிரகாஷ் கத்தியால் குத்தியதில் விக்னேஷ் படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவரை உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இறந்தார்.

கொலை தொடர்பாக எஸ்.எஸ். காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் பிரகாசை கைது செய்தனர்.

Tags:    

Similar News