செய்திகள்
ஜெய்சங்கர்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை ஏற்க முடியாது: ஜெய்சங்கர்

Published On 2021-02-04 01:51 GMT   |   Update On 2021-02-04 01:51 GMT
தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஏற்புடையதல்ல. இப்பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றுள்ளோம் என்று மாநிலங்களவையில் ஜெய்சங்கர் கூறினார்.
புதுடெல்லி :

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்தவுடன், தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, தமிழக மீனவர்கள் பிரச்சினையை எழுப்பினார்.

‘‘சமீபத்தில், கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேர், இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் சித்ரவதை காரணமாக, மீன்பிடித் தொழிலை கைவிடும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரையும் இந்த பிரச்சினையை எழுப்பினார். ‘‘இலங்கை கடற்படையால் இதுவரை 235 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அவசர தீர்வு காண வேண்டும்’’ என்று அவர் கூறினார்.

அப்போது, சபைத்தலைவர் வெங்கையா நாயுடு, ‘‘இது தொடர்ந்து நடந்து வரும் பிரச்சினை. அடுத்தடுத்து வந்த அரசுகள், தங்களால் இயன்ற அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளன. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்று கூறினார்.

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:-

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் ஏற்புடையதல்ல . இந்த பிரச்சினை, இலங்கை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினாா்.

டிராக்டர் பேரணி குறித்து செய்தி வெளியிட்டதற்காக 6 மூத்த பத்திரிகையாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுமாறு மத்திய உள்துறை மந்திரிக்கு காங்கிரஸ் உறுப்பினர் திக்விஜய்சிங் கோரிக்கை விடுத்தார்.
Tags:    

Similar News