உள்ளூர் செய்திகள்
கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

Published On 2022-05-06 10:04 GMT   |   Update On 2022-05-06 10:04 GMT
தஞ்சை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களில் தகுதியானவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31-3-2022 அன்றைய தேதியில் ஐந்து வருடம் முடிவடைந்த முறையாக பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மேல்நிலை வகுப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற பதிவுதாரர்கள் அனைவரும் தகுதி உடையவராவர். 

மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை எழுதப் படிக்கத் தெரிந்தவர் முதல் பத்தாம் வகுப்பு, மேல்நிலை வகுப்பு மற்றும் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று பதிவு செய்து 31-3-2022 அன்றைய தேதியில் ஓராண்டு முடிவடைந்த பதிவுதாரர்கள் தகுதி உடையவராவர்.

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பிரிவினர் 45 வயதுக்குள்ளும், இதர பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அதிகபட்ச குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. 

பயன்தாரர் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் படிப்பவராக இருக்க கூடாது. இந்த தகுதியை உள்ளடக்கிய பதிவு தாரர்களுக்கு தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூன்றாண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு, மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்த வர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்க இயலாது. மேற்குறிப்பிட்ட தகுதியுடைய பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, அசல் பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ், அசல் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகை புரிந்து விண்ணப்பப் படிவத்தை தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசமாக பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News