செய்திகள்
காசாவில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவுகணை தடுப்பு அமைப்பு அழிக்கும் காட்சி

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கம் இடையே ஒப்பந்தம் - காசா பகுதியில் சண்டை நிறுத்தம்

Published On 2020-09-01 01:05 GMT   |   Update On 2020-09-01 01:05 GMT
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகள் இடையே காசா பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வந்த நிலையில் சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம்:

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. 

இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
 
இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். 

ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக காசா முனை பகுதியில் இருந்து வெடிக்கக்கூடிய எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்களை இஸ்ரேல் வான்வெளிக்குள் பறக்கவிட்டு ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தி வந்தனர். 

இரவு நேரங்களில் காசாவில் இருந்து பறக்கவிடப்படும் எரிவாயு நிரப்பப்பட்ட பலூன்கள் இஸ்ரேல் நாட்டு மக்களின் வீடுகளில் விழுந்து தீவிபத்துக்களை
ஏற்படுத்தி வந்தன. இந்த தாக்குதலில் பல வீடுகள் தீக்கிரையானது. இந்த தாக்குதல்களால் 300-க்கும் அதிகமான தீவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 

மேலும், காசாவில் இருந்து பல ராக்கெட் தாக்குதல்களும் மீது ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேல் மீது ஏவப்பட்டது.   

இதனால் ஆத்திரமடைந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலாக காசா முனை பகுதி மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் இந்த அதிரடி தாக்குதலில் காசா பகுதி பெரும் சேதத்தை சந்தித்தது.

மேலும், காசா முனைக்கு இஸ்ரேல் வழியாக அனுப்பப்படும் உதவிகளை நிறுத்தியது. காசாவில் உள்ள மின்நிலையத்திற்கு இஸ்ரேலில் இருந்து விநியோகிக்கப்படும் மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் காசா பகுதியில் பெரும் மின்தடை ஏற்பட்டது. 

மேலும், எரிபொருள் விநியோகமும் நிறுத்தப்பட்டது. பாலஸ்தீனியர்கள் காசா பகுதிகளில் இருந்து கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டிருந்த தூரம் குறைக்கப்பட்டது. இஸ்ரேலின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் காசா முனை பகுதியில் பெரும் பிரச்சனைகள் உருவானது.

இதையடுத்து இஸ்ரேலுடன் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள ஹமாஸ் முயற்சி மேற்கொண்டது. இரு தரப்பிற்கு இடையேயான பேச்சுவார்த்தையில் கத்தார் நாடு மத்தியஸ்தம் செய்தது.

காசாவில் இருந்து எரிவாயு பலூன்களை பறக்கவிடுவதை நிறுத்தவேண்டும், ஏவுகணை தாக்குதலையும் நிறுத்தவேண்டும் என இஸ்ரேல் தெரிவித்தது. இதை ஹமாஸ் ஏற்கொண்டது. தடைசெய்யப்பட்ட எரிவாயு விநியோகத்தை அனுமதிக்க வேண்டும் என ஹமாஸ் சார்பில் இஸ்ரேலிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை இஸ்ரேல் ஏற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டதையடுத்து 3 வாரங்களாக நடைபெற்றுவந்த தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தத்திற்கு பல தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இந்த சண்டை நிறுத்தம் தற்காலிக ஒன்றாகவே கருதப்படுகிறது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஏவுகணை, எரிவாயு பலூன் தாக்குதல்களை மீண்டும் தொடங்கும் பட்சத்திலும் காசா முனை மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தும் பட்சத்திலும் இந்த சண்டை நிறுத்தம் உடனடியாக முடிவுக்கு வந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

Tags:    

Similar News