ஆன்மிகம்
சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசன விழா கோலாகலம்

Published On 2020-12-31 03:14 GMT   |   Update On 2020-12-31 03:14 GMT
சிதம்பரத்தில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் ராஜசபையில் நடனமாடி நடராஜர் காட்சி அளித்தார். அப்போது ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! என்ற பக்தி கோ‌‌ஷத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுக்கு 6 மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரே உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும்.

மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம். இதை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தினமும் சாமி வீதிஉலா நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

தேரோட்டம் முடிந்த பின் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சாமிகள் ஊர்வலமாக வந்து ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது. தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, 8.30 மணிக்கு மேல் தங்க காசுகளால் சொர்ணாபிஷேகம் நடந்தது. அதிகாலையில் கொட்டிய பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா அபிஷேகத்தை தரிசனம் செய்தனர்.

பின்னர் சாமிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. இதையடுத்து மாலை 5.10 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ராஜசபையில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர். அதில் பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் அளித்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...!, நடராஜ பெருமானே...! சிவ, சிவ.. ஓம் நமச்சிவாய என்று விண்ணை முட்டும் வகையில் பக்தி கோ‌‌ஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர்.

விழாவில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவில் இன்று( வியாழக்கிழமை) இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் சாமி வீதிஉலா நடக்கிறது. அத்துடன் ஆருத்ரா தரிசன விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News