செய்திகள்
திருச்சி விமான நிலையம்

மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.21 லட்சம் பணம் பறிமுதல்

Published On 2019-12-03 11:00 GMT   |   Update On 2019-12-03 11:00 GMT
திருச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.21 லட்சம் பணத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி:

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து தினம்தோறும் இரவு 10.35 மணிக்கு மலிண்டோ விமானம் திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து இரவு 11.25 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானம் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு திருச்சிக்கு வந்தது.

மீண்டும் இந்த விமானம் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்தபோது அதில் ஏற இருந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பாதர் ரேஷ்மி (43) மற்றும் தாசினா பேகம் (34) ஆகிய இரு பயணிகளின் உடமைகளையும் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் உடமைகளில் மறைத்து வெளிநாட்டிற்கு கடத்த இருந்த ரூ.8.26 லட்சம் மதிப்புள்ள இந்திய ரூபாயும், ரூ.13.30 லட்சம் மதிப்புள்ள மலேசியன் ரிங்கிட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைத்தொடர்ந்து அந்த இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தவிர்க்கப்பட்ட நிலையில் தற்போது திருச்சியில் இருந்து வெளிநாட்டு பணத்தாள்கள் கடத்தப்படுவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
Tags:    

Similar News