இந்தியா
நிலஅபகரிப்பு கோர்ட்டுகள் இயங்காதது ஏன்? பதில் அளிக்க சென்னை ஐகோர்ட்டு பதிவாளருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு கோா்ட்டுகள் அமைத்தது செல்லாது என்ற சென்னை ஐகோா்ட்டு அளித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது.
புதுடெல்லி:
தமிழகத்தில் நிலஅபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுகள் அமைத்தது செல்லாது என சென்னை ஐகோா்ட்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்ற நீதிபதிகள், நில அபகரிப்பு சிறப்பு கோா்ட்டுகள் அமைத்தது செல்லாது என்ற சென்னை ஐகோா்ட்டு அளித்த தீர்ப்புக்கு தடை விதித்தது. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஆர்.சுபாஷ் ரெட்டி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையின்போது தமிழக அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் வி.கிருஷ்ணமூர்த்தி, ‘இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஏற்கனவே பதில் அளித்துள்ளார். நில அபகரிப்பு வழக்குகளை வழக்கமான கோர்ட்டு விசாரித்து வருகிறது’ என வாதிட்டார்.
நில அபகரிப்பு வழக்குகளை அதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு கோர்ட்டுகள் மட்டுமே விசாரிக்க முடியும். வேறு கோா்ட்டுகள் விசாரிப்பதை சட்டம் அனுமதிக்கவில்லை என மனுதாரர் முத்துலட்சுமி தரப்பு வக்கீல் கே.இளங்கோவன் வாதிட்டார்.
இதையடுத்து, தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டுகள் இயங்காமல் இருப்பதற்கு காரணம் என்ன?, நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டுகளுக்கு நீதிபதிகள் நியமிக்கப்படாதது ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்த்து பதில் அளிக்க சென்னை ஐகோா்ட்டு பதிவா ளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
மேலும் தமிழகத்தில் நில அபகரிப்பு சிறப்பு கோர்ட்டுகள் செயல்படுகின்றனவா?, 6 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளருக்கு சுப்ரீம்கோர்ட்டு கடந்த செப்டம்பர் 25-ந்தேதி உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது.