செய்திகள்
மேட்டூர் அணை

வடகிழக்கு பருவமழை - முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்கிறது

Published On 2019-10-22 07:33 GMT   |   Update On 2019-10-22 07:33 GMT
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருக்கிறது. தண்ணீர் தட்டுப்பாடு இருந்து வந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரிகள், குளங்கள், அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

டெல்டா மாவட்டங்களின் முக்கிய பாசன அணையான மேட்டூர் அணையின் மொத்த உயரம் 93.47 அடி இதில் தற்போது 90 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 32.80 அடி. இதில்,29.58 அடி தண்ணீர் இருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 10.57 அடி. தற்போது 3.83 அடி தண்ணீர் உள்ளது. வைகையில் தற்போதைய நீர்மட்டம் 4.05 அடி. இதன் மொத்த உயரம் 6.09 அடி. பாபநாசம்அணையில் 3.56 அடியும்.

பேச்சிப்பாறை அணையில் 4.35 அடியும், பெருஞ்சாணி அணையில் 2.2 அடி தண்ணீர் இருக்கிறது. மழை காரணமாக தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 1,273 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. புழல் ஏரியில் 442 மல்லியன் கன அடியும், சோழவரம் ஏரியில் 104 மில்லியன் கன அடியும் செம்பரம்பாக்கம் ஏரியில் 30 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து அணைகளும், ஏரிகளும் நிரம்பும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Tags:    

Similar News