செய்திகள்
புதிய கட்சியை தொடங்க டிரம்ப் திட்டம்? -ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவியதும் டொனால்டு டிரம்ப் முன்வைத்த மோசடி குற்றச்சாட்டுக்கு அவரது கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. அத்துடன், டிரம்பின் செயல்களை விமர்சித்தனர்.
இதற்கிடையே, ஜனவரி 6 ஆம் தேதி பாராளுமன்றத்தில் டிரம்ப் பேச்சால் அவருடைய ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்ட விவகாரம் சொந்த கட்சியினரின் அதிருப்தியை மேலும் அதிகரிக்கச் செய்தது. கலவரத்திற்கு டிரம்ப் பொறுப்பு ஏற்க வேண்டும் என குடியரசு கட்சியை சேர்ந்த மெக்கனல் விமர்சனம் செய்தார். இதுபோன்ற காரணங்களால் டிரம்புக்கு குடியரசு கட்சியின் பல்வேறு தலைவர்களுடன் சுமுக உறவு இல்லாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையில் தனியாகவே தேசபக்தர் என்ற பெயரில் ஒரு கட்சியை தொடங்க டிரம்ப் யோசித்து வருகிறார் என அவருக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய வட்டாரங்களுடன் ஆலோசனையை அவர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரையில் இருகட்சி ஆட்சி முறையே தொடர்கிறது. ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி ஆகிய கட்சிகளே மாறி மாறி ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றன. இந்நிலையில், மூன்றாவதாக ஒரு கட்சியை நிறுவுவது என்பது டிரம்புக்கு சவாலான பணியாகவே இருக்கும் என பார்க்கப்படுகிறது.