செய்திகள்
கொலை

ஆலங்குளம் அருகே மதுபோதையில் தகராறு: தொழிலாளி அடித்து கொலை

Published On 2021-10-11 08:04 GMT   |   Update On 2021-10-11 08:04 GMT
ஆலங்குளம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூரை சேர்ந்தவர் சுப்பையா. இவருக்கு 2 மனைவிகள். இதில் முதல் மனைவியின் மகன் மாரியப்பன்(வயது 45). 2-வது மனைவியின் மகன் இசக்கிமுத்து. 2 பேரும் கூலி தொழிலாளிகள்.

இந்நிலையில் இன்று காலை மாரியப்பன் தனது வீட்டில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அக்கம்பக்கத்தினர் கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவித்தனர். உடனே அவர் ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாரியப்பன் உடலில் காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், நேற்று இரவு மாரியப்பனுக்கும், அவரது சகோதரர் இசக்கிமுத்துவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கி உள்ளனர்.

ஆத்திரம் அடைந்த இசக்கிமுத்து அங்கு கிடந்த கட்டையால் மாரியப்பனை தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த மாரியப்பன் வீட்டில் மயங்கி விழுந்து இறந்துள்ளார் என்பது தெரியவந்ததது. இதுதொடர்பாக இசக்கிமுத்து மற்றும் அவரது உறவினர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News