செய்திகள்
உடுமலை சோதனை சாவடியில் தீவிரமாக சோதனை செய்து வரும் காட்சி.

எல்லையில் கண்காணிப்பு தீவிரம் - தடுப்பூசி செலுத்தாதவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

Published On 2021-09-09 10:57 GMT   |   Update On 2021-09-09 10:57 GMT
மேலும் கேரளாவில் இருந்து யாரேனும் வந்திருந்தால் அவர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும்.
உடுமலை:

கேரளாவை அச்சுறுத்தி வரும் கொரோனா மற்றும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்தவகையில் கேரளாவில் இருந்து திருப்பூர் மாவட்டத்திற்குள் நுழையும் உடுமலை பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தமிழக-கேரள எல்லையில் உள்ள ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு  தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்படுவதோடு கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது. வாகனங்களில் வருபவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. 

மேலும் கொரோனா 2 வது கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், 3 நாட்களில் எடுக்கப்பட்ட கொரோனா சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சான்றிதழ்கள் இல்லாமல் வருபவர்கள் அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். 

அதேபோல் இங்கிருந்து கேரளாவிற்கு அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் காய்கறி, பால்வண்டிகளிலும் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் கேரளாவில் இருந்து வருபவர்களால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதால் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

மேலும் கேரளாவில் இருந்து யாரேனும் வந்திருந்தால் அவர்களிடமிருந்து தள்ளியே இருக்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News