செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லை மாவட்டத்தில் 5 டாக்டர்கள் உள்பட மேலும் 862 பேருக்கு கொரோனா

Published On 2021-05-01 09:57 GMT   |   Update On 2021-05-01 09:57 GMT
நெல்லை அரசு மருத்துவமனை, பெருமாள்புரம், மாநகர பகுதி, அண்ணா நகர், தியாகராஜநகர் ஆகிய இடங்களில் 3 பெண் டாக்டர் உள்பட 5 டாக்டர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தினசரி பாதிப்பில் 50 சதவீதத்துக்கு மேல் மாநகர பகுதியில் உறுதி செய்யப்படுகிறது.

கடந்த 40 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் 50 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று 2978 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இன்று புதிதாக 862 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியவர்கள். அவர்களுக்கு தற்போது மீண்டும் கொரோனா ஏற்பட்டு உள்ளது.

நெல்லை அரசு மருத்துவமனை, பெருமாள்புரம், மாநகர பகுதி, அண்ணா நகர், தியாகராஜநகர் ஆகிய இடங்களில் 3 பெண் டாக்டர் உள்பட 5 டாக்டர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

அன்புநகரில் 11 பேருக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பில் 11 பேருக்கும், பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று பாளை மண்டலத்தில் அதிகபட்சமாக 147 பேரும், மேலப்பாளையத்தில் 100 பேரும், நெல்லை மண்டலத்தில் 93 பேரும், தச்சை மண்டலத்தில் 29 பேரும் என மொத்தம் 369 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

இதே போல் மாவட்டத்தில் அம்பை, மானூர், நாங்குநேரி, பாளை, பாப்பாக்குடி, வள்ளியூர், சேரன்மகாதேவி, களக்காடு என பல்வேறு இடங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் மொத்த பாதிப்பு 25 ஆயிரத்தை 459 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும் 422 பேர் குணமடைந்தனர்.

இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது 5,489 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News