செய்திகள்
கைது

கேரளாவுக்கு கடத்திச்செல்வதற்காக வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கிய வாலிபர் கைது

Published On 2020-10-18 14:10 GMT   |   Update On 2020-10-18 14:10 GMT
கேரளாவுக்கு கடத்திச்செல்வதற்காக வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசி வாங்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆயிரம் கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
உத்தமபாளையம்:

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின்படி தேனியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டது. இந்த பறக்கும் படையை சேர்ந்த அதிகாரிகள் கம்பம்மெட்டு, குமுளி மலைச்சாலை, போடிமெட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் மாவட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கூடலூர் நகராட்சி பகுதியில் வாலிபர் ஒருவர், வீடு, வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்குவதாகவும், அவற்றை கேரளாவுக்கு அவர் கடத்திச்செல்ல உள்ளதாகவும் உத்தமபாளையம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் உதயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் உமாதேவி மற்றும் போலீசார் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி வாங்கிக்கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் க.புதுப்பட்டியை சேர்ந்த விவேக்குமார் (வயது 30) என்பதும், கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கடத்திச்செல்வதற்காக வீடுகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கியதும், அவற்றை அதே பகுதியில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். மேலும் விவேக்குமார் கேரளாவில் யாரிடம் ரேஷன் அரிசியை விற்பனை செய்கிறார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News