செய்திகள்
புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த துபாய் பட்டத்து இளவரசர் மினி பஸ் ஒன்றில் ஏறி பயணம் செய்தார்.

துபாயில் புதிய பேருந்து நிலையம்- பட்டத்து இளவரசர் திறந்து வைத்து பஸ்சில் பயணம்

Published On 2020-10-20 06:44 GMT   |   Update On 2020-10-20 06:44 GMT
துபாய் அல் குபைபா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு உள்ள பேருந்து நிலையத்தை பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று திறந்து வைத்து பஸ்சில் பயணம் செய்து பார்வையிட்டார்.
துபாய்:

துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து பணிகள் கடந்த ஆண்டு முதல் தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இதில் குறிப்பாக உலக கண்காட்சிக்கு அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிய உள்ளதால் மெட்ரோ ரெயில் போக்குவரத்து, சாலைகள் விரிவாக்கம், சைக்கிள் பாதைகள், பஸ் போக்குவரத்து ஆகியவை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பஸ் போக்குவரத்தை மேம்படுத்த 17 பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் மேம்படுத்தப்பட்டு 614 புதிய பஸ்கள் போக்குவரத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயில் அல் குபைபா என்ற பகுதியில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. தற்போது அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து உள்ளது.

மொத்தம் 2 ஆயிரத்து 452 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலக பகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மொத்தம் 132 பஸ்களை நிறுத்திக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக வெளியில் இருந்து வரும் பஸ்களுக்காக 50 நிறுத்தங்கள், 48 கார் நிறுத்த பகுதிகள், 34 டாக்சிகளுக்கான கார் நிறுத்த பகுதிகள், 60 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் பகுதி, உணவகங்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய பேருந்து நிலையமானது சர்வதேச தரத்தில் மிக பிரமாண்டமாக, ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் அளவு விசாலமாக கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்து பார்வையிட்டார்.

புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து அதன் வசதிகளை பட்டத்து இளவரசர் பார்வையிட்டார். இதில் அங்குள்ள பஸ் ஒன்றில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை சுற்றி வந்தார். அப்போது அந்த வளாகத்தில் பயணிகள் மற்றும் வர்த்தக ரீதியில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.

இது குறித்து துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் கூறும்போது, “நிலையான, விதிவிலக்கான உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமாக உலக அளவில் முன் உதாரணமாக திகழ விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

அவருடன் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் பொது இயக்குனர் மத்தார் அல் தயார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News