ஆன்மிகம்
பிரம்மாண்ட மணியையும், அதற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டதையும் படத்தில் காணலாம்..

தஞ்சை பெரியகோவிலுக்கு 362 கிலோ எடையில் புதிய மணி

Published On 2020-01-03 04:52 GMT   |   Update On 2020-01-03 04:52 GMT
தஞ்சை பெரியகோவிலுக்கு 362 கிலோ எடையில் புதிய மணியை பக்தர் ஒருவர் வழங்கினார். இந்த மணி ஓரிரு தினத்தில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் தமிழர்களின் பெருமையை பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 23 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி நடக்கிறது. இதற்காக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

பெருவுடையார் சன்னதிக்கு செல்லும் வழியில் கோவில் மணி பொருத்தப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பு பொருத்தப்பட்ட இந்த மணி பழுதடைந்தது. இந்த மணிக்கு பதிலாக புதிய மணி பொருத்த திட்டமிடப்பட்டது. தஞ்சையை சேர்ந்த பக்தர் ஒருவர், கோவில் மணியை உபயமாக செய்து வழங்க முன்வந்தார். இதையடுத்து புதிதாக கோவில் மணி தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே உள்ள நான்காம்கட்டளையில் 362 கிலோ எடையில் 3½ அடி உயரத்தில் செய்யப்பட்டது.

ரூ.2 லட்சம் மதிப்பில் செம்பு, காரியம், வெண்கலம் கொண்டு இந்த மணி வடிவமைக்கப்பட்டது. இந்த புதிய மணி கோவில் நிர்வாகத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அந்த மணிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பழைய மணி உள்ள இடத்தின் அருகே புதிய மணி பொருத்தப்பட உள்ளது.

பழைய மணி, பக்தர்களின் பார்வைக்காக பொருட்காட்சி கூடத்தில் வைக்கப்பட உள்ளது. புதிய மணியின் எடை அதிகமாக இருந்ததால் உடனடியாக பொருத்தப்படவில்லை. ஓரிரு தினத்தில் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவிலில் மகாநந்திக்கு எதிரே 28 அடி உயரத்தில் கொடி மரம் உள்ளது. இரண்டாம் சரபோஜி மன்னரால் கடந்த 1814-ம் ஆண்டு இந்த கொடி மரம் அமைக்கப்பட்டது. அது பழுதடைந்ததால் கடந்த 2003-ம் ஆண்டு புதிய கொடிமரம் பிரதி‌‌ஷ்டை செய்து அதை சுற்றிலும் செப்புத்தகடு பொருத்தப்பட்டது.



கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் கொடி மரம் திருப்பணி செய்யப்பட உள்ளது. இதற்காக நேற்று கொடிமரத்திற்கு பாலாலயம் செய்யப்பட்டது.

மேலும் கோவிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி அம்மன், 12 விநாயகர் சிலைகள், 8 முருகன் சிலைகள், 252 சிவலிங்கங்கள் உள்பட 338 சிலைகளுக்கு கடந்த மாதம் 9-ந் தேதி மா காப்பும், எண்ணெய் காப்பும் சாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து அ‌‌ஷ்டபந்தன மருந்து சாற்றும் பணி தொடங்கியது.

அரக்குபொடி, காவிப்பொடி, கருகுங்கிலியம், வெள்ளை மிளகு, வெண்ணெய் உள்பட 8 வகையான பொருட்களை சேர்த்து உரலில் போட்டு உலக்கையால் இடித்து அதை மாவாக்கி சாமி சிலைகளின் அடி பீடத்தில் வைக்கும் பணி தொடங்கியது. முதலில் மராட்டா கோபுரத்தின் அடிப்பகுதியில் உள்ள விநாயகர் சிலைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து அனைத்து சாமிகளுக்கும் வைக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி சிவஞானம், வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேஸ்வரன், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கிரு‌‌ஷ்ணன், கண்காணிப்பாளர் ரெங்கராஜ், பெரியகோவில் சதயவிழாக்குழு தலைவர் துரை.திருஞானம், உறுப்பினர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், பண்டரிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News