செய்திகள்
பிலிப்பைன்சில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 19 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் வடக்கு பகுதியில் உள்ளது அபாயோ மாகாணம், மலைப்பாங்கான பகுதியான அங்கு அபாயகரமான வழுக்கும் சாலைகள், வளைவுகள் மற்றும் செங்குத்தான பள்ளத்தாக்குகளும் உள்ளன.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 7 மணியளவில் அம்மாகாணத்தில் உள்ள கானர் நகருக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் அரசிடம் இருந்து உதவித்தொகை மற்றும் வேளாண்மைக்கு விதைகள் பெற்றுக்கொண்ட சுமார் 50 பேர் தங்களது சொந்த கிராமங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்.
அந்த சாலைகள் வழுக்கும் தன்மை உடையதால் எதிர்பாராதவிதமாக லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.