உள்ளூர் செய்திகள்
தென்காசி சுவாமி சன்னதி பஜார் வீதி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.

தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கையொட்டி 800 போலீசார் கண்காணிப்பு

Published On 2022-01-23 06:21 GMT   |   Update On 2022-01-23 06:21 GMT
தென்காசி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலைய கண்காணிப்பிலும் 2 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. சுமார் 800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கையொட்டி மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு போலீஸ் நிலைய கண்காணிப்பிலும் 2 தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டது. சுமார் 800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாவட்ட எல்லைகளில் 6 நிரந்தர சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

முழு ஊரடங்கு காரணமாக கூலக்கடை பஜார், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, காசி விஸ்வநாதர் கோவில் ரத வீதிகள், பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை  மற்றும் மார்க்கெட் பகுதிகள் ஆகிய பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. 

கேரளாவுக்கு காய்கறி, பால் உள்ளிட்டவற்றை மட்டும் ஏற்றி சென்ற வாகனங்களை போலீசார் அனுமதித்தனர்.அதே நேரத்தில் செங்கோட்டை மற்றும் தென்காசி ரெயில் நிலையங்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பிய பயணிகள் வாகனங்களுக்கும் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

முழு ஊரடங்கையொட்டி சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லை. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். 

ஏற்கனவே திருமணம் நடத்துவதற்கு முடிவு செய்து ஏற்பாடு செய்திருந்தவர்களுக்கு குறைந்த அளவிலான மக்களுடன் திருமணம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனையொட்டி மண்டபங்களுக்கு செல்பவர்கள் அழைப்பிதழ் காண்பித்த உடன் அனுமதிக்கப்பட்டனர்.

சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் குற்றாலம் அருவிக்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சீசன் முடிந்துவிட்டதாலும், மழை இல்லாததாலும் மெயினருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
Tags:    

Similar News