செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல்லில் ரெயில் மறியல் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 30 பேர் கைது

Published On 2019-10-10 10:38 GMT   |   Update On 2019-10-10 10:38 GMT
திண்டுக்கல்லில் ரெயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் - சிலுவத்தூர் சாலையில் பழனி, கரூர், சென்னை மார்க்கமாக செல்லும் 3 ரெயில்வே கேட்டுகள் உள்ளன. ரெயில்கள் வரும் சமயங்களில் இந்த கேட்டுகள் மூடப்படுவதால் பாலகிருஷ்ணாபுரம், சிலுவத்தூர், செங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பெரும்பாலான பொதுமக்கள் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் குடியேறியுள்ளனர். இந்த ரெயில்வே கேட்டுகளால் காலையில் வேலைக்கு செல்பவர்கள், மாணவ-மாணவிகள் கடும் சிரமம் அடைந்தனர். எனவே 3 ரெயில்வே கேட்டுகளையும் கடக்கும் விதமாக மேம்பாலம் அமைக்கும் பணி 5 வருடத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது.

ஆனால் இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடந்து 50 சதவீத பணிகள் கூட முடியவில்லை. மேலும் பாலம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் உரிமையாளர்கள் பலர் இழப்பீடு தொகை பெற முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

பஸ்களும் மாற்று பாதையில் இயக்கப்படுவதால் பாலகிருஷ்ணாபுரம் பகுதி திண்டுக்கல்லில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவாக உள்ளது. மேலும் இப்பகுதியில் குடியிருப்பவர்கள் அவசர காலங்களில் செல்ல முடிவதில்லை. ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர சிரமம் உள்ளதால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

ஆமை வேகத்தில் நடந்து வரும் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பொதுமக்களின் சிரமத்தை தவிர்த்திட கட்டி முடிக்கப்பட்டுள்ள சுரங்க வழிப்பாதைகளை உடனே திறக்க வேண்டும், மேம்பால பணிக்காக கையகப்படுத்திய நிலுவையில் உள்ள நிலங்களுக்கு உடனடியாக இழப்பீட்டு தொகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அனைத்து நலச்சங்கள், பொதுமக்கள் சார்பாக ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமை தாங்கினார். சிலுவத்தூர் ரோடு, சந்துரு நகர், மாசிலாமணிபுரம், கோவிந்தராஜ்நகர், ஸ்ரீநகர், ராஜீவ்காந்திநகர், ஏர்போர்ட் நகர், அழகம்பட்டி, கொல்லம்புதூர், வடக்குமாலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் நலச்சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள். திண்டுக்கல்லில் இருந்து மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில அடி தூரம் முன்னதாக ரெயில் நிறுத்தப்பட்டது. மறியல் குறித்து பாலபாரதி கூறுகையில், நீண்ட நாட்களாக நடந்து வரும் மேம்பாலப்பணிகளால் அப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் சிலரை காவல் துறையினரை வைத்து மிரட்டுகின்றனர். தற்காலிகமாக பழனி ரெயில்வே கேட்டை திறந்து விட வேண்டும். சுரங்கப்பாதை பணிகளை முடிக்க வேண்டும். மேலும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சம்பவம் குறித்து அறிந்ததும் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. உஷா மற்றும் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பாலபாரதி உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News