செய்திகள்
குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
குடியாத்தத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. குற்றவாளிகளை பிடிக்க குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சங்கர், ஏட்டுகள் மோசஸ், ஜலாலுதீன், கோவிந்தசாமி, சந்திரபாபு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலையில் சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் அவர் பேரணாம்பட்டு அருகே கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்த வசந்தராஜ் (வயது24) என்பதும், அவர் ஓட்டி வந்தது குடியாத்தம் நகரில் திருடிய மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே குடியாத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் என்பதும், தற்போது குடியாத்தம் பழைய பஸ் நிலையம், ராஜகணபதி நகர், ஜவஹர்லால் தெரு, லிங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின்பேரில் 6 மோட்டார் சைக்கிள்களை மீட்டனர்.