செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் இதுவரை ஒன்றரை லட்சம் பேருக்கு தடுப்பூசி
தென்காசி மாவட்டத்திற்கு இன்று மேலும் 1,500 கோவிஷீல்டு, 900 கோவாக்சின் என மொத்தம் 2,400 தடுப்பூசிகள் வந்தன.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 38 ஆயிரத்து 523 மாதிரிகள் எடுக்கப்பட்டதில் 25 ஆயிரத்து 964 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நேற்று வரை 24 ஆயிரத்து 509 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது தொற்று பெருமளவில் குறைந்து வருகிறது. ஏற்கனவே மாவட்டததில் 15 ஆயிரத்து 813 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சங்கரன் கோவில், செங்கோட்டை மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமுடன் வந்து போட்டு கொள்கின்றனர். தடுப்பூசி மையங்களில் ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு கொள்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று வரை 1 லட்சத்து 48 ஆயிரத்து 698 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 600 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டத்திற்கு இன்று மேலும் 1,500 கோவிஷீல்டு, 900 கோவாக்சின் என மொத்தம் 2,400 தடுப்பூசிகள் வந்தன.
அவை தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை அரசு மருத்துவமனைகள், பாவூர்சத்திரம், கரிவலம் வந்தநல்லூர், குருவிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை தாண்டியது.