டெல்லியில் இன்று பிரதமர் மோடியுடன் ஜி.கே.வாசன் சந்திப்பு
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து தஞ்சை தொகுதியில் போட்டியிட்டது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அ.தி.மு.க., பாரதிய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். அதன் பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் இந்த கூட்டணியை ஆதரித்தார்.
தொடர்ந்து பிரதமர் மோடியையும், மத்திய அரசு திட்டங்களையும், தமிழக அரசையும் ஆதரித்து வருகிறார். சமீபத்தில் சீன அதிபரை சந்திப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் நேரில் சென்று வரவேற்றார். அப்போது தன்னை டெல்லியில் வந்து சந்திக்கும்படி மோடி அழைப்பு விடுத்ததாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதற்கிடையே ஜி.கே.வாசனை பா.ஜனதாவில் சேர்க்க முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. தற்போது தமிழக பா.ஜனதாவில் தலைவர் பதவி காலியாக உள்ளதால் த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைத்து ஜி.கே.வாசனை தலைவராக்க அழைப்பு விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ஜி.கே.வாசன் இதற்கு தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. த.மா.கா.வை பா.ஜனதாவுடன் இணைப்பதை தொண்டர்கள் ஏற்பார்களா? வாசன் எடுக்கும் முடிவு என்ன? என்பது பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஜி.கே. வாசன் டெல்லி சென்றுள்ளார். அவர் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார்.
இதுபோல் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவையும் ஜி.கே.வாசன் சந்திக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதன் பிறகு ஜி.கே. வாசன் முடிவு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.