வழிபாடு
கற்குவேல் அய்யனார் கோவில்

கற்குவேல் அய்யனார் கோவில் கள்ளர்வெட்டு திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

Published On 2021-12-13 04:07 GMT   |   Update On 2021-12-13 04:07 GMT
தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர்வெட்டு திருவிழா வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் அருகே காயாமொழியை அடுத்த தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.

கோவிலில் இந்த ஆண்டு கள்ளர் வெட்டு திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், வில்லிசை நடைபெற்றது.

நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு ஐவராஜா பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை, மதியம் சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு உற்சவர் வீதி உலா நடைபெறும்.

விழாவின் சிகர நாளான வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 4 மணியளவில் கோவில் பின்புறமுள்ள செம்மணல் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெறும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 2,500 பக்தர்களும், நேரடியாக வரும் 500 பக்தர்களும் கோவிலில் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இ்ல்லை.

16, 17-ந்தேதிகளில் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. மாவிளக்கு, முளைப்பாரி, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடத்தவும் அனுமதி கிடையாது. 16-ந்தேதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடை திறந்து இருக்கும். மற்ற நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடை திறந்து இருக்கும்.

18-ந்தேதியில் இருந்து கோவில் வளாகத்தில் புனித மண் பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், யூ-டியூப் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் காந்திமதி, தக்கார் அஜித், உதவி ஆணையாளர் ரோஜாலி சுமதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News