ஆன்மிகம்
சுவாமி சண்முகர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளிய காட்சி

திருச்செந்தூர் மாசித்திருவிழா: சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா

Published On 2021-02-25 03:58 GMT   |   Update On 2021-02-25 03:58 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழாவில் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 8-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

அதிகாலையில் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் வெண்பட்டு அணிந்து, வெண்மலர்கள் சூடி, பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, 8 வீதிகளிலும் உலா வந்து மேலக்கோவில் சேர்ந்தார்.

அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பகல் 11.45 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் பச்சை பட்டு உடுத்தி, பச்சை இலை, மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்த சுவாமியை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

10-ம் திருநாளான நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசித்திருவிழா தேரரோட்டத்தில் பெரிய தேரில் சுவாமி எழுந்தருளி, வெளி வீதி நான்கிலும் பவனி வருவார். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தாண்டு பெரிய தேர் இரண்டும் ஓடவில்லை.

இதனால் விநாயகர், சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன், தெய்வானை அம்மன் தனித்தனி மூன்று சிறிய தேர்களில் வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) 11-ம் திருநாள் இரவு சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் விஷ்ணுசந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News