செய்திகள்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு - ஜனாதிபதி உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

Published On 2019-08-10 08:04 GMT   |   Update On 2019-08-10 08:04 GMT
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேசிய மாநாடு கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ -சட்டப்பிரிவை ரத்து செய்யும் மசோதா, காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை ரத்து செய்து ஜம்மு மற்றும் காஷ்மீரை ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசமாகவும் லடாக் பகுதியை இன்னொரு யூனியன் பிரதேசமாகவும் உருவாக்கும் மசோதா உள்பட 4 மசோதாக்களை பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா தாக்கல் செய்தார்.

விவாதத்துக்கு பின்னர் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மக்களவையிலும் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. இரவு 7 மணிவரை நீடித்த விவாதங்களுக்கு பின்னர் இந்த 4 மசோதாக்கள் மீதும் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டன.

இந்த 4 மசோதாக்களும் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் இவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.



ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து லடாக், ஜம்மு-காஷ்மீர் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு ஒப்புதல் அளித்து கையொப்பமிட்டார்

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேசிய மாநாடு கட்சி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களான முஹம்மது அக்பர் லோனே மற்றும் ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தொடர்ந்துள்ள இந்த வழக்கில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் தொடர்பாக ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை ’அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது’ என்று அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News