செய்திகள்
வேலூர் சத்துவாச்சாரியில் டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் வீட்டில் 50 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி கோர்ட்டு அருகே உள்ள சவுத் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சஞ்சிவ் மானஷா(வயது48). வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கம் உள்ள ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பீரோவில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை வீடு திரும்பிய டாக்டர் சஞ்சிவ் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுபற்றி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. கொள்ளை நடந்த இடம் சத்துவாச்சாரியில் மக்கள் நடமாட்டம் அதிகமான பகுதி. இங்கு கொள்ளை நடந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். முதற்கட்டமாக அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். டாக்டர் வீடு பூட்டி கிடந்ததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர். அப்பகுதியில் வெளியாட்கள் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.