செய்திகள்
2-ம் போக சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற வாய்ப்பு
அமராவதி அணையில் இருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் கிடைத்ததால் 2-ம்போகத்தில் கூடுதல் மகசூல் பெற வாய்ப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உடுமலை:
உடுமலை அருகே அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டத்துக்குட்பட்ட 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பாசன திட்டத்தில் பழைய ஆயக்கட்டுக்குட்பட்ட கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்கள் வாயிலாக 2,832 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
வடகிழக்கு பருவமழை சீசனில் அமராவதி அணையிலிருந்து கோரிக்கை அடிப்படையில் கல்லாபுரம், ராமகுளம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது.இதனால், இரண்டாம் போகத்துக்கான நடவு பணிகளை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர்.தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் அணையிலிருந்து இப்பாசன பகுதிக்கு, தண்ணீர் வழங்கப்பட்டதால் எவ்வித பாதிப்புமின்றி நெற்பயிர்கள் கதிர்கள் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பருவமழையால் அணையிலிருந்து குறித்த நேரத்தில் தண்ணீர் கிடைத்ததால், இரண்டாம் போகத்தில் கூடுதல் மகசூல் பெற வாய்ப்புள்ளது. சாகுபடி பரப்பை அடிப்படையாக கொண்டு கல்லாபுரத்தில் தற்காலிக அரசு கொள்முதல் மையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும்.அறுவடை காலத்தில் நெல்லுக்கு செயற்கையாக விலை குறைவதையும் தவிர்க்க முடியும் என்றனர்.