ஆன்மிகம்
தஞ்சை பெரிய கோவிலில் உள்ள புல் தரையில் பக்தர்கள் அமர்ந்து இருந்த காட்சி.

தஞ்சை பெரிய கோவிலில் அனைவருக்கும் அனுமதி

Published On 2020-09-29 04:24 GMT   |   Update On 2020-09-29 04:24 GMT
கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டதால் தஞ்சை பெரியகோவிலில் சிறுவர்கள்-முதியவர்கள் என அனைவரும் அனுமதிக்கப்படுகின்றனர். புல்தரையில் பக்தர்கள் அமர்ந்து பொழுதுபோக்கினர்.
தஞ்சாவூர் :

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் வழிபாட்டு தலங்களை மூடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. அதன்படி கடந்த மார்ச் 18-ந் தேதி முதல் தஞ்சை பெரியகோவில் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழகஅரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை, அரண்மனை தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டு, கயிறு கட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் கோவிலுக்கு வருபவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்கள் குறிக்கப்பட்டன. பக்தர்கள் உடலின் வெப்பநிலை கண்டறியப்பட்டது. கோவிலுக்குள் பக்தர்கள் அமர அனுமதி அளிக்கப்படவில்லை.

என்னென்ன வழிமுறைகளை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என தொல்லியல்துறை சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவிலின் நுழைவு வாயில் விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களும், 10 வயதிற்குட்பட்ட சிறுவர், சிறுமிகளும் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் சிறுவர், சிறுமிகள், முதியவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் இருந்தது.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பெரியகோவிலுக்குள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்களின் முகவரி எதுவும் குறிப்பிடப்படவில்லை. உடல் வெப்பநிலையும் கண்டறியப்படவில்லை. சிறுவர்கள், முதியவர்களும் கோவிலுக்குள் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி புல்தரையில் பக்தர்கள் அமரவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமி தரிசனம் முடித்துவிட்டு சன்னதியை விட்டு வெளியே வரும் பக்தர்கள் குடும்பத்தினருடன் புல்தரையில் அமர்ந்து பொழுது போக்குகின்றனர். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News