ஆட்டோமொபைல்
இந்தியாவில் சோதனை செய்யப்படும் ஸ்கோடா கமிக்
ஸ்கோடா நிறுவனத்தின் கமிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்கோடா நிறுவனத்தின் புதிய எஸ்.யு.வி. மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் ஸ்கோடா கமிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியானதில் சிறிய எஸ்.யு.வி. மாடலாக கமிக் உருவாகி இருக்கிறது.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் MQB A0 பிளாட்ஃபார்மில் உருவாகியுள்ளது. புதிய எஸ்.யு.வி. மாடல் 4.2-4.3 மீட்டர் நீளமாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இது ஒட்டுமொத்த வடிவமைப்பு பார்க்க கமிக் சர்வதேச மாடலை போன்று காட்சியளிக்கிறது. எனினும் அம்சங்கள் இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வழங்கப்படலாம்.
காரின் உள்புறம் தொடுதிரை வசதி கொண்ட பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது. புதிய மாடலில் பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஐந்து பேர் அமரக்கூடிய கேபினில் பின்புற இருக்கைகளை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.
ஸ்கோடா கமிக் மாடல் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் டீசல் என்ஜினை ஸ்கோடா வழங்காது. ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் வெளியாக இருக்கும் ஸ்கோடாவின் முதல் எஸ்.யு.வி. மாடலாக இது இருக்கிறது.
புகைப்படம் நன்றி: autocarindia