செய்திகள்
செல்வ முருகன்

பழையகாயல் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

Published On 2021-02-19 22:58 GMT   |   Update On 2021-02-19 22:58 GMT
பழையகாயல் அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.
ஆறுமுகநேரி:

தூத்துக்குடி அண்ணாநகர் மங்கலாபுரம் 12-வது தெருவில் வசித்து வரும் தர்ம சுந்தர் மகன் செல்வமுருகன் (வயது 21). இவர் குரும்பூர் அருகே உள்ள மயிலோடையில் தங்கியிருந்து பிளம்பிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது அண்ணன் சுடலைமணி (22). இவர் ஆட்டோ டிரைவராக தூத்துக்குடியில் வேலை பார்த்து வந்துள்ளார். செல்வமுருகன் தனது அண்ணனை போல் கார் ஓட்ட வேண்டும், ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காலையில் அவரை தேடி செல்வமுருகன் மோட்டார் சைக்கிளில் குரும்பூருக்கு வந்துள்ளார்.

பின்னர் செல்வமுருகனுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக, தூத்துக்குடிக்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்றுள்ளனர். பழைய காயல் அருகே உள்ள சிர்கோனியம் குடியிருப்புப் பகுதியில் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது எதிரேவந்த கார் ஒன்று வேகமாக செல்வ முருகன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட செல்வமுருகன் பலத்த காயமடைந்தார். கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அக்கம் பக்கத்தினர் செல்வமுருகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுயநினைவின்றி இருந்த செல்வ முருகன் பரிதாபமாக நேற்று பகலில் இறந்துபோனார்.

இதுபற்றி செல்வ முருகனின் அண்ணன் சுடலைமணி ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News