செய்திகள்
கொலை

ஒருதலைகாதல் ஏமாற்றத்தால் ஆத்திரம்- புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் கைதான வாலிபர் வாக்குமூலம்

Published On 2021-10-21 10:48 GMT   |   Update On 2021-10-21 10:48 GMT
புதுமாப்பிள்ளைக்கு முன்பாக அவரது மனைவியை கொல்ல திட்டம் தீட்டியதாக கைதான வாலிபர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சூரியராகவன் (வயது 31). டி.வி. மெக்கானிக். இவரது மனைவி மகாலட்சுமி.

சூரியராகவன் நேற்று கடையில் இருந்த போது அங்கு வந்த ஒருவர் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்தார். சம்பவ இடத்தில் கிடந்த மிளகாய் பொடி, கத்திகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது எட்டயபுரம் அருகே உள்ள சோழபுரத்தை சேர்ந்த ஆடு அறுக்கும் தொழிலாளி ஆனந்தராஜ் (22) என்பவர் கொலை செய்தது தெரியவந்தது. காட்டுப் பகுதியில் பதுங்கி இருந்த ஆனந்த ராஜை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் கூறியதாவது:-

நான் ஆடு அறுக்கும் தொழிலுக்கு செல்லும் போது மகாலட்சுமி என்ற பெண்ணை ஒருதலையாக காதலித்தேன். ஆனால் மகாலட்சுமியும், சூரிய ராகவனும் காதலித்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

நான் காதலித்த பெண்ணை வேறு ஒருவர் திருமணம் செய்தது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டினேன்.

முதலில் மகாலட்சுமியை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி அவரது நடவடிக்கையை கண்காணித்தேன். 2 வாரங்களுக்கு முன்பு எட்டயபுரம் பஸ் நிலையத்திற்கு அவர் தனியாக வந்தார்.

அப்போது அவரை கொல்ல சென்றேன். ஆனால் அங்கு இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, சப்- இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். எனவே இப்போது கொலை செய்தால் மாட்டிக்கொள்வோம் என அதனை தவிர்த்தேன்.

இதைத் தொடர்ந்து முதலில் சூர்யராகவனை கொல்ல திட்டம் தீட்டினேன். அதற்காக எனது வீட்டில் டி.வி. பழுதடைந்து உள்ளது. வீட்டில் வந்து அதனை சரி செய்து தாருங்கள் என அவரிடம் செல்போனில் கூறினேன்.

ஆனால் அவர் மற்றொரு வேலை இருப்பதாக காலம் தாழ்த்தி வந்தார். இதனால் நானே டி.வி.யை எடுத்துக்கொண்டு அவரது கடைக்கு சென்றேன். அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு டி.வி.யை சரி செய்துவிட்டீர்களா? என கேட்டேன். நேற்று அவர் என்னை அழைத்து டி.வி.வை பெற்றுக்கொள்ள கூறினார்.

இதைப் பயன்படுத்தி அவரை கொலை செய்ய நினைத்தேன். அதற்காக பையில் ஆடு அறுக்க பயன்படுத்தும் 2 கத்திகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவற்ற எடுத்துக் கொண்டு சென்றேன்.

பின்னர் அங்கிருந்த சூர்ய ராகவன் கண்களில் மிளகாய் பொடியை தூவி கத்தியால் கழுத்தை அறுத்து தலை துண்டித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்

இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News