உள்ளூர் செய்திகள்
நீலகிரியில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவக்கல்லூரி.

சிறப்பம்சங்களுடன் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு

Published On 2022-01-12 12:31 GMT   |   Update On 2022-01-12 12:31 GMT
தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை அல்லது கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது.

ஊட்டி:

தமிழகத்தில் நீலகிரி உள்பட 11 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று மாலை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.

தமிழகத்தில் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உயர்தர மருத்துவ வசதி இல்லாததால், இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக கோவை அல்லது கேரளாவுக்கு செல்லும் நிலை இருந்தது.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நீலகிரி ஊட்டி எச்.பி.எப்.பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் மற்றும் கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கரில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டும் பணிகள் நடந்து வந்தது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்து இன்று மாலை திறப்பு விழா நடைபெற்றது.

மலைப்பிரதேசம் என்பதால் பிற மாவட்டங்களை போல் இல்லாமல் ஊட்டியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என்ற வடிவமைப்பிலேயே மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இன்று திறப்பு விழா காணக் கூடிய இந்த மருத்துவ கல்லூரியில், மருத்துவமனை வளாகம், மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் வகையில் மருத்துவ கல்லூரி வளாகம், மருத்துவர்கள் குடியிருப்பு வளாகம் என 3 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது.

மருத்துவமனை வளாக மானது 19 ஆயிரத்து 757 சதுர மீட்டர் பரப்பளவில் 8 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ளது. இதில் தீவிர சிகிச்சை பிரிவு, பிசியோதெரபி, உயர்தர பிணவறை, மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மருத்துவர்களுக்கான 1,200 இருக்கைகள் கொண்ட கூட்ட அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர 108 வாகன கட்டுப்பாட்டு அறை, வாகனம் நிறுத்துமிடம், மருத்துவமனை அலுவலக கட்டிடம், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கான உணவு அருந்தும் அறை, கழிப்பறையும் அமைந்துள்ளது.

இதுபோக மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவ, மாணவிகளுக் கான ஆசிரியர் தொகுதி கட்டிட மும் 3 பிரிவுகளாக 9,438 சதுர மீட்டர் பரப்பளவில் பல்வேறு துறைகளை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.

இதில் மாணவ,மாணவிகள் கல்வி பயில்வதற்கு தேவையான நூலக கட்டிடம், மருத்துவ கல்லூரி நிர்வாக கட்டிடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும், குடியிருப்பு வளாகத்தில் மருத்துவ முதல்வர் குடியிருப்பு, குடிமை மற்றும் துணை குடிமை மருத்துவர் குடியிருப்பு, செவிலியர் விடுதி கட்டிடம், மருத்துவ மாணவ, மாணவிகள் விடுதி என அனைத்து அம்சங்களும் நிறைந்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் மலைப் பிரதேசத்தில் அமைய உள்ள 2-வது அரசு மருத்துவ கல்லூரி இதுவாகும். ஏற்கனவே இமாசல பிரதேச மாநிலத்தில் மலைப்பகுதியில் இதுபோன்று அரசு மருத்துவ கல்லூரி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News