செய்திகள்
ராணுவ வீரர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி

இதுதான் எனக்கு மனநிறைவு... ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

Published On 2020-11-14 06:46 GMT   |   Update On 2020-11-14 06:46 GMT
ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போது தனக்கு மன நிறைவு ஏற்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஜெய்சால்மர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று தீபாவளி கொண்டாடினார். பின்னர் அவர்களிடையே பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டு மக்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு. மக்களுடைய அன்பையும் வாழ்த்தையும் உங்களுக்காக நான் கொண்டு வந்துள்ளேன். ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பொதுமக்கள் இன்று தங்கள் வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும். 

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும்போதுதான் எனக்கு மன நிறைவாக இருக்கிறது. பனிமலையோ பாலைவனமோ ராணுவ வீரர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்குதான் என்னுடைய தீபாவளி. உங்கள் முகத்தில் மகிழ்ச்சியை பார்க்கும்போது நான் இரு மடங்கு மகிழ்ச்சி அடைகிறேன்.

130 கோடி இந்தியர்களும் உங்களுடன் நிற்கிறார்கள். ஒவ்வொரு இந்தியனும் நம் வீரர்களின் வலிமை மற்றும் வீரம் குறித்து பெருமைப்படுகிறான். நம் நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் இருந்து நமது துணிச்சலான வீரர்களை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்நிகழ்வில் பிரதமருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி எம்எம் நரவனே, எல்லைப் பாதுகாப்பு படை தலைமை இயக்குனர் ராகேஷ் அஸ்தானா உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
Tags:    

Similar News