செய்திகள்
திருட்டு நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்தியபோது எடுத்த படம்.

சிறுவாச்சூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை-பணம் திருட்டு

Published On 2021-04-29 10:44 GMT   |   Update On 2021-04-29 10:44 GMT
சிறுவாச்சூரில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் காலனி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், சென்னையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அபிராமி (வயது 22). தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அபிராமி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை அபிராமி தனது வீட்டிற்கு சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது டி.வி.யும், படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் தங்க சங்கிலி, தலா அரை பவுன் எடையுள்ள 2 தங்க மோதிரங்கள், 1 பவுன் தங்க சங்கிலி என மொத்தம் 5 பவுன் நகையும், ரூ.50 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போயிருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News