ஆன்மிகம்
மயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் அஸ்திரதேவர் எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்த காட்சி.

மயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி

Published On 2020-11-16 08:56 GMT   |   Update On 2020-11-16 08:56 GMT
மயிலாடுதுறையில் காவிரி துலா கட்டத்தில் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
கங்கை நதி உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது, பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனிதநீராடினால் பாவச்சுமைகள் நீங்கும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி ஐப்பசி மாதம் 30 நாட்கள் காவிரியில் புனித நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கி வருகிறது.

துலா உற்சவத்தை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோவில், அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாணேஸ்வரர் கோவில், காசிவிஸ்வநாதன் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கடந்த மாதம் 17-ந் தேதி ஐப்பசிமாத முதல்நாள் தீர்த்தவாரியுடன் துலா உற்சவ விழா தொடங்கியது. இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் சாமி புறப்பாட்டிற்கு அரசு அனுமதி வழங்காததால் முதல் நாள் தீர்த்தவாரியின் போதே அஸ்திரதேவர் மட்டும் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அதேபோல ஐப்பசி மாத கடைசி நாளான நேற்று கடைமுக தீர்த்தவாரி விழா நடந்தது. இந்த தீர்த்தவாரியின் போது அஸ்திரதேவர் மட்டும் துலா கட்ட காவிரியில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அஸ்திரதேவர் காவிரி ஆற்றில் இறங்கி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காவிரியில் புனித நீராடினர்.
Tags:    

Similar News